tamilnadu

img

இலங்கை குண்டுவெடிப்பை காரணமாக வைத்து “ராணுவம் தொடர்ந்து நிலைகொள்வதை அனுமதிக்க இயலாது”

யாழ்ப்பாணம், மே 4-இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை காரணமாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் ராணுவத்தைத் தொடர்ந்து நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல்துறைக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும்வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் ராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும்.பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைக் காரணமாக வைத்து ராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைக் காரணமாக முன்வைத்து வடமாகாணத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதால் பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது என்று தெரிவித்துள்ள அவர், தாக்குதலை காரணம்காட்டி ராணுவத்தினரை தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது கவலை தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.“பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவிமக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;